எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் உட்பட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின. இதற்கு ஆளும் தரப்பு ஒப்புக்கொள்ளாததால் இரு அவைகளும் அடுத்தடுத்து பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், நேற்றைய நாடாளுமன்றப் பணிகள் ஏறக்குறைய முடங்கின.

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் உட்பட முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பின்(அமெரிக்கா) பங்களிப்பு குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர்.

கேள்வி நேரம் தொடர அனுமதிக்குமாறும் ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஏற்கெனவே உறுதி அளித்தபடி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றம் ஓம் பிர்லா கூறினார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இதன் காரணமாக அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் மாநிலங்களவை கூடியது. அப்போது, முந்தைய கோரிக்கைகளோடு, ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்தும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.