இங்கிலாந்துக்கெதிரான லார்ட்ஸ் டெஸ்டில் தோற்றதால் 2 – 1 எனப் பின்தங்கியிருக்கும் இந்திய அணி தொடரை 2 – 2 என சமன் படுத்த நாளை (ஜூலை 23) நான்காவது டெஸ்டில் களமிறங்கவிருக்கிறது.
கடந்த போட்டியில் பிளெயிங் லெவனில் ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதால் அவருக்குப் பதில் அணியில் யார் இடம் பிடிப்பார், பும்ரா களமிறங்குவாரா, மூன்று டெஸ்ட் போட்டியில் ஆடியும் ஒரு அரைசதம் கூட அடிக்காத கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுமா அல்லது முதல் டெஸ்ட் போட்டியோடு பென்ச்சில் உட்காரவைக்கப்பட்ட சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என பிளெயிங் மீதான எதிர்பார்ப்புகள் நீடிக்கின்றன.

இந்த நிலையில், சி.எஸ்.கே வீரர் நாளைய போட்டியில் அறிமுகமாகலாம் என்று கேப்டன் சுப்மன் கில் ஹின்ட் கொடுத்திருக்கிறார்.
போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய கில், “நாளைய போட்டியில் ஆகாஷ் தீப்பும் இல்லை, அர்ஷதீப்பும் இல்லை.
இருப்பினும் 20 விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பவுலர்கள் எங்களிடம் இருக்கின்றனர். நான் தயாராக இருக்கிறேன்.

அன்ஷுல் காம்போஜ் அறிமுகம் வாய்ப்புக்கு அருகில் இருக்கிறார். பிரசித் கிருஷ்ணாவா அல்லது அன்ஷுல் காம்போஜா என்பது நாளை தெரியும்.
அன்ஷுல் காம்போஜின் திறமையை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவரால் போட்டிகளை வென்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.” என்று கூறினார்.
கடந்த ரஞ்சி சீசனில் ஹரியானா அணியில் விளையாடிய அன்ஷுல் காம்போஜ் கேரளாவுக்கெதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.