4-வது டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம்.. முதல் இன்னிங்சில் 400 ரன்களை கடந்த இங்கிலாந்து

மான்செஸ்டர்,

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் அடித்திருந்தது. ஆலி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லி 84 ரன்களிலும், பென் டக்கட் 94 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜோ ரூட் மற்றும் போப் சிறப்பாக பேட்டிங் செய்தனர். பென் டக்கட் – கிராவ்லி கூட்டணி போல ஜோ ரூட் – ஆலி போப் கூட்டணியும் சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ஆலி போப் 71 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக்கும் சுந்தர் பந்துவீச்சிலேயே வீழ்ந்தார். அடுத்து ஜோ ரூட்டுடன், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட்டணி சேர்ந்தார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 38-வது சதத்தை நிறைவு செய்தார்.

இங்கிலாந்து அணி தற்போது வரை 96 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 409 ரன்கள் அடித்து பேட்டிங் செய்து வருகிறது. இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரூட் 105 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.