நேபிடா,
மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இதனை தொடர்ந்து மியான்மரில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், மியான்மரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.27 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
85 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.01 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 96.32 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.