டெஸ்ட் கிரிக்கெட்: கவாஸ்கர், டான் பிராட்மேனுடன் 3-வது வீரராக இணைந்த சுப்மன் கில்

மான்செஸ்டர்,

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன.

பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 228 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்த சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். நடப்பு தொடரில் சுப்மன் அடித்த 4-வது சதம் இதுவாகும்.

இதன் மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த கேப்டன்களின் மாபெரும் சாதனை பட்டியலில் சர் டான் பிராட்மேன், சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் 3-வது வீரராக சுப்மன் கில் இணைந்துள்ளார். மூவரும் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர்.

பின்னர் கை கோர்த்த வாஷிங்டன் சுந்தர் – ஜடேஜா கூட்டணி சிறப்பாக விளையாடி இந்திய அணியை 2-வது இன்னிங்சில் முன்னிலை பெற வைத்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில் களத்தில் உள்ளனர். பார்ட்னர்ஷிப் 150 ரன்களை கடந்து செல்கிறது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.