ரஷியா, சீனா,ஜப்பான்,அமெரிக்கா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை: மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்

டோக்கியோ,

ரஷ்யாவின் தூரக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. ரஷியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரஷியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, பெரு, ஈக்வடார் நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கிரசென்ட் சிட்டி, யுரேகா பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சுனாமி எச்சரிக்கையை அடுத்து ஜப்பான் பசிபிக் கடற்கரையோரம் உள்ள நகரங்களில் 9 லட்சம் பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.ஹோக்கைடோ முதல் ஒகினாவா வரையிலான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி அச்சுறுத்தலால் ஜப்பானின் வடகிழக்கில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டது.

ரஷியாவின் செவெரோ-குரில்ஸ்க் மற்றும் வடக்கு ஜப்பானின் கரைகளை சுனாமி அலை தாக்கியது. அப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவும், அனைத்து அவசர வழிமுறைகளையும் பின்பற்றவும் வலியுறுத்தினர்.

வடமேற்கு ஹவாய் தீவுகள் மற்றும் ரஷியாவின் கடற்கரையோரப் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. பசிபிக் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் கடற்கரைக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் இருந்து கார்களில் சாரை சாரையாக மக்கள் வெளியேறுவதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.