லாலு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது மேற்கு மத்திய ரயில்வேயில் குரூப் டி பிரிவில் வேலை வழங்குவதற்கு பிஹாரில் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக லாலுவுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், விசாரணை நீதிமன்றம் வழக்கை விசாரிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் லாலு பிரசாத் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த ஜூலை 18-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றம் லாலு மீதான வழக்கை விசாரிப்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

இருப்பினும், இந்த வழக்கு விசாரணைக்காக லாலு பிரசாத் யாதவ் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதாகவும் தெரிவித்து லாலு பிரசாத் யாதவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த புதிய மனுவில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை விசாரணையை ஒத்தி வைக்கக் கோரினார். சிபிஐ தனக்கு எதிராக அனுப்பிய சம்மனை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 12 அன்று விசாரிக்கவுள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணை நீதிமன்றத்தின் விசாரணையை ஒத்திவைக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.