நிலவை முதன்முதலில் சுற்றி வந்து வரலாறு படைத்த விண்வெளி வீரர் ஜிம் லவெல் காலமானார்

நியூயார்க்,

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான, ஸ்மிலின் ஜிம் லவெல் (வயது 97) காலமானார். நாசா விண்வெளி மையத்தின் மூத்த விண்வெளி வீரரான அவர், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியில் வீட்டில் இருந்தபோது காலமானார்.

இதனை நாசா நிர்வாகி மற்றும் போக்குவரத்து செயலாளரான சீன் டப்பி உறுதி செய்துள்ளார். 1968-ம் ஆண்டு விண்வெளி பயணம் மேற்கொண்ட அப்பல்லோ 8 விண்கல பயணத்தில், ஜிம் தலைமையில் நாசா வீரர்கள் பிராங்க் போர்மன் 2 மற்றும் வில்லியம் ஆண்டர்ஸ் ஆகியோர் சென்றனர்.

புவியின் ஈர்ப்பு விசையை கடந்து, மனிதர்கள் முதன்முறையாக விண்வெளிக்கு மேற்கொண்ட பயணம் என்ற வகையில் அது வரலாறு படைத்தது. வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்கு முன் 10 முறை நிலவை சுற்றி வந்தனர். இந்த பயணத்தில், உயிருடன் இருந்த கடைசி நபராக லவெல் அறியப்பட்டார். இந்நிலையில், அவர் வயது முதிர்வால் காலமானார்.

இதன்பின்னர், 1970-ம் ஆண்டு நிலவில் தரையிறங்கும் பயணத்தின்போது, அப்பல்லோ 13 விண்கலத்தின் ஆக்சிஜன் தொட்டி திடீரென விண்வெளியில் வெடித்தது. இதனால், விண்கலத்தில் இருந்த அனைவரும் ஆபத்தில் தள்ளப்பட்டனர்.

அப்போது அதில் பயணித்த ஜிம் லவெல் மற்றும், அவருடைய இரு சக வீரர்களான ஜான் ஸ்விகெர்ட் ஜூனியர் மற்றும் பிரெட் ஹெய்ஸ் ஜூனியர் ஆகியோர் உயிருடன் பூமிக்கு திரும்புவார்களா? என்பதில் சந்தேகம் எழுந்தது.

ஆனால், கடும் நெருக்கடிக்கு இடையிலும் அமைதியான முறையில் செயல்பட்டு, அந்த விண்கலம் பூமிக்கு திரும்புவதற்கு கமாண்டர் என்ற அளவில் உதவி புரிந்த ஜிம்முக்கு பாராட்டுகள் குவிந்தன. அதுவே அவருடைய கடைசி விண்வெளி பயணம் ஆகும்.

நான்கு முறை அவர் விண்வெளி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவருடைய மறைவுக்கு நாசா விண்வெளி மையம் வருத்தம் தெரிவித்து உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.