கோலாலம்பூர்,
மலேசியாவை சேர்ந்த பெண் நூருல் சியாஸ்வானி. 2016-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் திடீரென கார் விபத்தில் சிக்கினார். அப்போது இருந்து, அவரை கவனித்து கொள்ளும் பொறுப்பை நூருல் ஏற்று கொண்டார்.
கணவருக்கு டியூப் வழியே உணவு கொடுப்பது, குளிக்க வைப்பது, உடை மாற்றுவது என அனைத்து வேலைகளையும் செய்து வந்துள்ளார். ஒரு குழந்தையை போன்று பராமரித்து வந்திருக்கிறார். 6 ஆண்டுகளாக நன்றாக கவனித்து கொண்டதில், கணவர் உடல்நலம் தேறி வந்துள்ளார்.
நூருலுக்கு ஒரு மகனும் உள்ளார். கணவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதும், அவரை கவனித்து கொண்டதில் கிடைத்த அனுபவங்களை 2019-ம் ஆண்டு பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார். இதில், ஏற்பட்ட இரக்கத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நூருலை பேஸ்புக்கில் பின்தொடர்ந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் அதிர்ச்சி தரும் பதிவு ஒன்றை நூருல் வெளியிட்டு உள்ளார். அதில், அவருடைய கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்த புகைப்படங்கள் இருந்தன.
அந்த பதிவில், கணவருக்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார். நூருலின் கணவர் குணமடைந்ததும், மனைவியை விவாகரத்து செய்து விட்டு அய்பா ஐசம் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். எனினும், கணவர் மீது உள்ள அன்பு மற்றும் பாசம் நூருலுக்கு விட்டு போகவில்லை. அவரை நன்றாக கவனித்து கொள்ளும்படி அய்பாவிடம் நூருல் கேட்டு கொண்டார்.
2024-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி நூருலை அவருடைய கணவர் விவாகரத்து செய்துள்ளார். அடுத்து ஒரு வாரத்தில் மறுதிருமணமும் செய்து கொண்டார். இந்த தகவலை, மற்றொரு பதிவில், நூருல் வெளியிட்டு உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு நூருலின் கணவருக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு கணவராக தன்னுடைய கடமையை அவர் செய்யவில்லை என்றும், எப்படி நன்றியில்லாதவராக சிலர் உள்ளனர் என்றும், அவருக்கு மனம் என்பது இல்லையா? என்றும் ஒருவர் கேட்டுள்ளார்.
6 ஆண்டுகளாக குழந்தையை போல் கவனித்து கொண்ட அந்த பெண்ணுக்கு, கணவரின் ஒவ்வொரு பைசாவையும் நூருலுக்கு கிடைக்கும்படி கோர்ட்டு வழிசெய்ய வேண்டும் என மற்றொருவர் கூறியுள்ளார். வேறொருவர், நூருலுக்கு மதிப்பளிக்கும், நன்மை செய்ய கூடிய ஒருவரை கடவுள் அருளட்டும் என தெரிவித்து உள்ளார்.