சென்னை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக இந்த சீசனின் தொடக்க கட்டத்தில் சில போட்டிகளில் ஆடிய சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனால் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இதனிடையே 44 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஆனால் ஓய்வு குறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று கடைசி போட்டியின் முடிவில் தோனி கூறினார்.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மகேந்திரசிங் தோனியிடம் ரசிகர் ஒருவர், நீங்கள் அடுத்த ஐ.பி.எல்.சீசனிலும் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த தோனி, “என்னுடைய முழங்காலில் எனக்கு வலி இருக்கிறது. அதை யார் பார்த்துக் கொள்வது?” என்று கூறினார்.