ஜெருசலேம்,
இஸ்ரேல் ராணுவத்துக்கும், காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே பல மாதங்களாக சண்டை நடந்து வருகிறது. காசா மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:-
காசா பகுதியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், சேதம், உதவிப்பொருட்கள் கிடைக்காதது என அனைத்துக்கும் ஹமாஸ் இயக்கம்தான் காரணம். காசாவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக்கட்டி, வேலையை முடிப்பதை தவிர வேறு வழியில்லை.
காசாவை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல. அதை விடுவிப்பதுதான் இலக்கு. ஆனால், இஸ்ரேலுக்கு உள்ளேயும், வெளியேயும் சர்வதேச அளவில் பொய் பிரசாரம் நடந்து வருகிறது. காசாவை ராணுவமயத்தில் இருந்து விடுவித்தல், இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்பை மேற்கொள்ளுதல், இஸ்ரேல் அல்லாத சிவில் நிர்வாகம் பொறுப்பேற்றல் ஆகியவைதான் எங்கள் இலக்குகள்.
நிறைய வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அழைத்து வந்து காட்டுமாறு இஸ்ரேல் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். பணயக் கைதிகளை விடுவித்து, ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தால் காசாவில் நாளையே போர் முடிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.