அம்ரேலி,
குஜராத் கடலோர பகுதிகளில் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் கடலில் ராட்சத அலைகள் எழுந்து கொண்டிருந்தன. இதில் அம்ரேலி மாவட்ட கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த 3 படகுகள் கடலில் மூழ்கின. அவற்றில் இருந்த 28 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜப்ராபாத் நகரில் இருந்து 19 நாட்டிகல் மைலில் நடந்த இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கடலோர காவல்படையின் கப்பல் மற்றும் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய 2 ஹோவர்கிராப்டுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் நடந்த இந்த பணியால் 17 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் 11 மீனவர்கள் கடலில் மாயமாகி உள்ளனர். அவர்களையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குஜராத் கடற்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.