பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
இந்த ஆண்டு எதிர்பார்ப்பைவிட அதிக அளவில் மழைப்பொழிவு இருந்ததால் காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட முடிந்தது. மழைப்பொழிவு குறைவாக இருக்கும் ஆண்டில் காவிரியில் தமிழகத்தின் பங்கை கணக்கிட்டு வழங்க மேகதாதுவில் அணை கட்டுவது அவசியம்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், இப்போதே தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணைகட்டுவதன் மூலமாக 177.25 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க முடியாமல் போகுமா?.
அப்படி இருந்தும் மேகதாதுவில் அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அது எதற்கு என்று தெரியவில்லை. மேகதாதுவில் அணைகட்டுவதால் தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டுக்கு அதிக தண்ணீர் நிச்சயமாக செல்லும். அதனால் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என தமிழ்நாட்டு அரசிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.