இந்திய அணி குறித்து வெளிநாட்டு வீரர்கள் விமர்சனம்.. கவாஸ்கர் கடும் எதிர்ப்பு

மும்பை,

அடுத்த மாதம் துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (20 ஓவர்) இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடருகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இடம் இல்லாதது விமர்சனத்திற்குள்ளானது.

குறிப்பாக சமீப காலமாக வெள்ளைப்பந்து போட்டிகளில் அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்திய தேர்வுக்குழுவை ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் , வெளிநாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஏன் இந்திய கிரிக்கெட் குறித்து கவலைப்பட வேண்டும்? என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “வெளிநாட்டவர்கள், இந்திய கிரிக்கெட்டில் எந்தப் பங்கும் இல்லாதவர்கள். இந்திய கிரிக்கெட்டை பற்றிய அறிவு மிகக்குறைவாக இருந்தாலும், விவாதத்தில் குதித்து, தீயை மூட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் எவ்வளவு சிறந்த வீரர்களாக இருந்தாலும், இந்தியாவுக்கு எத்தனை முறை வந்திருந்தாலும், இந்திய அணியின் தேர்வு அவர்களின் விஷயம் அல்ல. அவர்கள் தங்கள் நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும், இந்திய கிரிக்கெட்டைப் பற்றி நாங்கள் கவலைப்படுவோம். ஆச்சரியமாக, அவர்களது நாட்டு அணிகள் தேர்ந்தெடுக்கப்படும்போது, அவர்களிடமிருந்து கருத்து கேட்கப்படுவதில்லை.

அவர்களது தேர்வு சரியாக இருப்பது போல் தோன்றுகிறது. அதனால் அவர்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை. ஆனால், இந்திய அணியின் தேர்வில் ஏன் மூக்கை நுழைக்கிறார்கள்? இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்ற நாடுகளின் அணித் தேர்வு பற்றி பேசுவதை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? இல்லை, நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம். அவர்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்கள், யாரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதைப் பற்றி எங்களுக்கு உண்மையில் கவலை இல்லை.

இன்று, பொது ஊடகங்களின் காலத்தில், பார்வைகளையும் பின்தொடர்பவர்களையும் பெறுவது முக்கியமாக இருக்கிறது. இதற்கு விரைவான வழிகளில் ஒன்று இந்திய கிரிக்கெட் விஷயங்கள் பற்றி கருத்து தெரிவிப்பது. பெரும்பாலும், அவர்கள் எதிர்மறையாகவே இதைச் செய்கிறார்கள், இதனால் இந்திய ரசிகர்களிடமிருந்து பெரும் எதிர்வினை கிடைக்கிறது. இது அவர்களின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால்தான் பல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய கிரிக்கெட் மற்றும் வீரர்களைப் பற்றி எதிர்மறையாக கருத்து தெரிவித்து வாழ்க்கை நடத்துகிறார்கள்” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.