சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் தொட ரும் பருவமழையின் சீற்றம் காரணமாக அம்மாநிலத்தின் உட்கட்டமைப்பு கடுமையாக பாதித்துள்ளது.
இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்டிஎம்ஏ) தெரிவித்துள்ளதாவது: மேகவெடிப்பு மற்றும் கன மழையால் இமாச்சல பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று தேசிய நெடுஞ்சாலைகள், 1,236 மின் மாற்றிகள், 424 நீர் வழங்கல் திட்டங்கள், 819 சாலைகள் சேதமடைந்துள்ளன.
கடந்த ஜூன் 20 முதல், மாநிலத்தில் ஏற்பட்ட ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 320-ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம், மின்சாரம் போன்றவை தொடர்பான சம்பவங்களால் மட்டும் 166 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கி 154 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான கிராமப்புற சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சம்பா (253), மண்டி (206), கங்க்ரா (61) போன்ற மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. 1,000-க்கும் மேற்பட்ட மின் விநியோக மாற்றிகள் சேதமடைந்துள்ளதால் மின்சார விநியோகம் பெருமளவில் தடைபட்டுள்ளது.
424 திட்டங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குடிநீர் மற்றும் நீர்ப்பாசன வசதிகள் தடைபட்டுள்ளன. சம்பா (77 திட்டங்கள்), குலு (39), மண்டி (56) மற்றும் சிம்லா (32) ஆகிய இடங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.
சாலைகளை சுத்தம் செய்யவும், மின் விநியோகத்தை மீட்டெடுக்கவும், நீர் விநியோக அமைப்புகளை சரிசெய்யவும் நிர்வாகம் பல குழுக்களை நியமித்துள்ளது. இவ்வாறு எஸ்டிஎம்ஏ தெரிவித்துள்ளது.
பத்ரிநாத் பாதிப்பு: உத்தராகண்டில் பெய்த கனமழை காரணமாக பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.