புதுடெல்லி: நாடு முழுவதும் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு எதிராக வழக்கறிஞர் அக் ஷய் மல்ஹோத்ரா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “2023-க்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சில பிஎஸ்-6 மாடல் வாகனங்கள் அதிக எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவில்லை. பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால் இயந்திர தேய்மானம், எரிபொருள் இழப்பு மற்றும் வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே எரிபொருள் நிலையங்களில் எத்தனால் கலக்காத பெட்ரோலும் கிடைப்பதை உறுதிப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், இந்த வழக்கின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். எத்தனால் கலப்பதால் கரும்பு விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்ட அவர், மத்திய அரசு உரிய ஆய்வுகளுக்குப் பிறகு இத்திட்டத்தை அமல்படுத்துகிறது” என்றார். இதையடுத்து இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.