சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், சனூர் சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் பதன் மஜ்ரா. அவர் மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதன்பேரில் பாட்டியாலா சிவில் லைன்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கடந்த 2-ம் தேதி கர்னால் பகுதியில் எம்எல்ஏ ஹர்மீத்தை கைது செய்தனர்.
கர்னால் போலீஸ் நிலையத்துக்கு எம்எல்ஏவை அழைத்து சென்றனர். அப்போது அவரும் அவரது கூட்டாளிகளும் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்த சூழலில் அவர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: எட்டு எஸ்பிக்கள், 8 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள், என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி விக்ரம் பிரார் ஆகியோர் என்னை கைது செய்தனர். கர்னால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்பிறகு என்னை என்கவுன்ட்டரில் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் காரணமாகவே போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பியோடினேன். இவ்வாறு அவர் கூறினார்.