சவுத்தம்டான்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தம்டானில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 414 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 110 ரன்களும், ஜோ ரூட் 100 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் மற்றும் கேஷவ் மகராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 400+ ரன்கள் குவிப்பது இது 7-வது முறையாகும். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 400+ ரன்கள் அடித்த 2-வது அணி என்ற இந்தியாவின் மாபெரும் சாதனையை இங்கிலாந்து சமன் செய்துள்ளது. இந்த சாதனை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 8 முறையுடன் முதலிடத்தில் உள்ளது.
அந்த பட்டியல்:
1. தென் ஆப்பிரிக்கா – 8 முறை
2. இந்தியா/இங்கிலாந்து – 7 முறை
3. ஆஸ்திரேலியா – 3 முறை
இதனையடுத்து 415 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.