சிஎஸ்கே அணியில் இணையும் பிருத்வி ஷா? பிளெமிங் தலைமையில் சென்னையில் பயிற்சி?

ஐபிஎல் 2026 ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்திற்கு முன்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியை வலுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் முன்னிலையில், சென்னையில் ஒரு பிரம்மாண்டமான தேர்வு முகாம் நடைபெற்றது. இதில், இந்திய கிரிக்கெட்டின் இளம் புயல் பிருத்வி ஷா உட்பட நான்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பங்கேற்றது, சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Zee News as a Preferred Source

சிஎஸ்கே-வின் தேடல்

கடந்த ஐபிஎல் சீசனில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே தவிர, மற்ற தொடக்க மற்றும் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர் போன்ற வீரர்கள் சொதப்பியதால், சிஎஸ்கே அணி ஒரு நிலையான மற்றும் அதிரடியான தொடக்க வீரரை தேடி வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மூத்த வீரர்களின் ஓய்வுக்கு பிறகு, அணியை மறுசீரமைக்கும் கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

சென்னை அணியில் இருந்து சாம் கர்ரன், தீபக் ஹூடா, விஜய் ஷங்கர், ராகுல் திரிபாதி போன்ற வீரர்கள் வெளியேற உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த மினி ஏலத்தில், சிஎஸ்கே அணி சுமார் ரூ.23 கோடி ரூபாய் கையிருப்புடன் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகையை கொண்டு, அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு துறையை சரிசெய்யும் முனைப்பில் அணி நிர்வாகம் உள்ளது.

பிருத்வி ஷா: சிஎஸ்கே-வின் புதிய நம்பிக்கை?

ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்பட்ட பிருத்வி ஷா, கடந்த சில ஆண்டுகளாக தனது ஃபார்ம் மற்றும் உடற்தகுதி காரணமாக சவால்களை சந்தித்து வருகிறார். ஐபிஎல் 2025 ஏலத்தில் அவர் எந்த அணியாலும் வாங்கப்படாதது, அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு பெரிய சரிவாக பார்க்கப்பட்டது. இருப்பினும், தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, புத்துணர்ச்சியுடன் மீண்டும் களமிறங்கியுள்ளார் பிருத்வி ஷா. சமீபத்தில் நடந்த புச்சி பாபு கிரிக்கெட் தொடரில், மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி சதம் அடித்து, தனது கம்பீரமான மறுபிரவேசத்தை பதிவு செய்தார். அவரது இந்த ஆட்டம், பல ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது, அதில் சிஎஸ்கே முதன்மையாக உள்ளது.

மோசமான பார்மில் உள்ள வீரர்களை மீண்டும் பழைய பார்மிற்கு மாற்றுவதில் சிஎஸ்கே அணிக்கு ஒரு தனி வரலாறு உண்டு. ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே போன்ற பல வீரர்கள் சிஎஸ்கே-வில் இணைந்த பிறகு தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய உச்சத்தை தொட்டனர். அந்த வகையில், 25 வயதே ஆன பிருத்வி ஷாவின் அபாரமான திறமையை சரியான பாதையில் வழிநடத்தினால், அவர் சிஎஸ்கே அணியின் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என அணி நிர்வாகம் நம்புகிறது. பிருத்வி ஷாவின் அதிரடியான ஆட்டமும், பவர்-பிளே ஓவர்களில் ரன் குவிக்கக்கூடிய திறனும், சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசைக்கு மேலும் பலம் சேர்க்கும்.

சோதனையில் பங்கேற்ற மற்ற வீரர்கள்

பிருத்வி ஷாவுடன் மேலும் மூன்று உள்நாட்டு தொடக்க ஆட்டக்காரர்களும் இந்த தேர்வில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதன்மூலம், சிஎஸ்கே அணி ஒரு வலுவான இந்திய பேட்டிங் வரிசையை கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும், டிரேடிங் மூலம் சஞ்சு சாம்சன், ராகுல் தேவத்தியா, வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களை அணிக்குள் கொண்டு வரவும் சிஎஸ்கே நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிஎஸ்கே அணியின் இந்த தீவிரமான தேர்வுகள், 2026 ஐபிஎல் தொடரை வெல்வதற்கும், தோனிக்கு பிறகான ஒரு வலுவான அணியை கட்டமைப்பதற்கும் அவர்கள் எவ்வளவு முனைப்புடன் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. பிருத்வி ஷா சிஎஸ்கே அணிக்கு வருவாரா என்பது மினி ஏலத்தில் தெரிய வரும். இருப்பினும், இந்த முயற்சி சிஎஸ்கே ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் ஏலம், சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.