பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி… டிரம்ப் அளித்த பதில் என்ன?

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்திய கிழக்கு பகுதியில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அப்போது அவர் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு நிருபர்கள் அவரை சூழ்ந்தனர்.

அவரிடம் பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. பாலஸ்தீன நாட்டுக்கு நீங்கள் அங்கீகாரம் தருவீர்களா? என அப்போது கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஒற்றை நாடு, இரட்டை நாடு அல்லது 2 நாடு என்பது பற்றியெல்லாம் நான் பேசவில்லை. நாங்கள் காசாவை கட்டமைப்பது பற்றி பேசி வருகிறோம் என்றார்.

நிறைய பேர் ஒரு நாடு என்ற முடிவை விரும்புகின்றனர். சிலர் இரு நாடு வேண்டும் என விரும்புகிறார்கள். வருங்காலத்தில் பாலஸ்தீனம் தனி நாடு அமைப்பது பற்றிய அரசியல் சூழல் ஏற்படுவதற்கு சிறிது காலம் எடுக்கும். அதனை இனிதான் நாம் காண வேண்டும். அதுபற்றி நான் எதுவும் கூறவில்லை என்று கூறினார்.

2 ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்ததில், 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதில் பலன் ஏற்பட்டது.

இதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர்நிறுத்தம் கடந்த 11-ந்தேதி அமலுக்கு வந்தது. இதனால், இரு தரப்பு பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். எனினும், இதனை கண்காணிப்பதற்காக அமெரிக்க வீரர்கள் 200 பேர் காசாவுக்கு செல்வார்கள். தவிரவும், எகிப்து, கத்தார், துருக்கி, அமீரகத்தின் வீரர்களும் இந்த கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், காசாவில் அமைதி ஏற்படுவதற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக, டிரம்ப் நேற்று இஸ்ரேலுக்கு புறப்பட்டு சென்றார். அவர் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, காசா அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு சேர்ப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் உள்ள தலைவர்களை ஒன்றிணைப்பதற்காக நான் மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்கொள்கிறேன்.

நாங்கள் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியடைய செய்ய போகிறோம் என்றார். யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கூறினார். இஸ்ரேல் நாட்டுக்கு சென்று விட்டு அவர் எகிப்து நாட்டுக்கும் சென்றார். இந்த பயணத்தில், பணய கைதிகளின் குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் எகிப்தில் ஷார்ம் எல்-ஷேக் என்ற சுற்றுலா நகரில் நேற்று மதியம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில், ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் குறைப்பது உள்ளிட்ட 21 அம்ச திட்டங்களை டிரம்ப் வெளியிட்டார். அப்போது எகிப்து ஜனாதிபதி அப்தில் பத்தா எல்-சிசி, பிராந்திய அமைதிக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, ஹமாஸ் பிடித்து வைத்திருந்த இஸ்ரேல் பணய கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் பின்னர் வீடு திரும்பி சொந்தங்களுடன் இணைந்தனர். இதனால், இஸ்ரேல் மற்றும் காசா பகுதியில் உள்ள பொதுமக்களிடையே, மீண்டும் மகிழ்ச்சி திரும்பியுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.