திருவனந்தபுரம்,
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (வயது 80). இவர் 2008 முதல் 2013ம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராக செயல்பட்டுள்ளார்.
இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரைலா ஒடிங்கா ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளாவுக்கு வந்துள்ளார். அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், ரைலா ஒடிங்கா இன்று காலை ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்ட உடன் இருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ரைலா ஒடிங்காவை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். ரைலா ஒடிங்காவின் உடல் கென்யாவுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது.