புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் மருத்துவ மாணவி ஒருவரை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடியது.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் கூறும்போது, “மருத்துவ மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதேநேரம் நள்ளிரவு 12.30 மணிக்கு அவர்கள் கல்லூரி வளாகத்தைவிட்டு எப்படி வெளியில் சென்றனர்” என்றார்.
இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று எக்ஸ் பக்கத்தில், “பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியையே முதல்வர் மம்தா குறை கூறி உள்ளார். பாஜக முதல்வர் ஒருவர் இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருந்தால், என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்திருப்பார்கள். இந்த விவகாரத்தில் ஊடகங்கள் கூட மவுனம் காக்கின்றன” என பதிவிட்டுள்ளார்.