சென்னை: சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை நிராகரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதாவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அறிமுகம் செய்தார். சட்ட மசோதாவை அறிமுகம் செய்ய அனுமதி அளித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா, நிதிச் சட்ட மசோதா என்ற வகைப்பாட்டில் வருவதால், இதை பேரவையில் ஆய்வு செய்ய ஆளுநர் பரிந்துரை பெறப்பட வேண்டும்.
பொதுமக்களின் கருத்து அறிந்து, கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, சுகாதாரத் துறையால் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, சட்டத் துறையால் சரிபார்க்கப்பட்டு, சுகாதாரத் துறை அமைச்சரால் பல கட்டங்களில் சரிபார்க்கப்பட்டு, சட்ட மசோதாவின் பிரதி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படியான வழக்கமான நடைமுறையைப் பின்பற்றாமல், இந்த சட்ட மசோதாவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்து, அந்த கருத்துகள் பேரவையில் அறிமுகம் செய்யப்படும்போது, பேரவை உறுப்பினர்களுடைய கவனத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் சட்டத்துக்கும், நமது சட்டப்பேரவை விதிமுறைகளுக்கும் முரணானது.
பேரவையில் ஒரு சட்ட மசோதா விவாதிக்கப்படும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்களை திரும்பப் பெறவும், இல்லையெனில், வாக்கெடுப்பைக் கோரவும் அதிகாரம் உள்ளது.
பேரவையால் இத்தகைய மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன் மீது கருத்து தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. எனவே, அவரிடம் இருந்து வந்துள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது.
சட்ட மசோதாக்களை இந்த பேரவை ‘பொருத்தமற்ற முறையில்’ அல்லது ‘தகுந்த முறையில் அல்லாமல்’ ஆய்வு செய்வதைப் போன்ற தொனியில், ‘பொருத்தமான’ அல்லது ‘தகுந்த’ எனும் பொருள்படக் கூடிய வார்த்தையை ஆளுநர் குறிப்பிட்டிருப்பது, இந்த பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய கருத்து. அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
சட்டம் இயற்றுவது, பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆகவே, ஆளுநரிடம் இருந்து வந்துள்ள அந்த கருத்துகள் அடங்கிய செய்தி,
அவைக்குறிப்பில் இடம்பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட எந்த உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதால் அந்த கருத்துகளை இங்கு பதிவுசெய்ய நான் விரும்பவில்லை.
எனவே, ‘2025-ம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதாவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரது கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை பேரவை நிராகரிக்கிறது’ என்னும் தீர்மானத்தை மொழிகிறேன். உறுப்பினர்கள் அனைவரும் இதை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் முதல்வரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.