ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்துக்கான அரிசியை பெற்றுக் கொள்ளலாம்: அமைச்சர் தகவல்

சென்னை: வடகிழக்குப் பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபரிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து நியாய விலைக் கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். அதாவது அக்டோபர் மாத ஒதுக்கீடான 12 – 35 கிலோ அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும் அக்டோபர் மாத அரிசி ஒதுக்கீட்டை இதுவரை பெறாதவர்களும் நவம்பர் மாத ஒதுக்கீடான 12 – 35 கிலோ அரிசியை இம்மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

நவம்பர் மாத அரிசியை அக்டோபரில் பெறாதவர்கள், வழக்கம் போல் நவம்பர் மாதத்தில் தங்களுக்கு உரிய அரிசியினைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.