“தமிழக அரசின் திருத்த மசோதா, உயர்கல்வியை தனியார்மயமாக்கும்'' – கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு

தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த ‘தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வரைவை’ அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் திமுக கூட்டணிக் கட்சியினரும் கண்டித்து பேசியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கல்வியாளர்களும் கண்டித்து வருகின்றனர்.

உயர் கல்வி
உயர் கல்வி

இந்த சட்ட முன்வரைவை கடுமையாக கண்டித்து, ‘மக்கள் கல்வி கூட்டியக்கம்’ ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் இரா. முரளி, வீ. அரசு, ப. சிவகுமார், கல்வியாளர் கண். குறிஞ்சி ஆகியோர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

“ஏற்கனவே தனியாருக்கு பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி அளித்துவிட்டு, அதில் மேலும் சலுகைகள் வழங்கும் வரைவுத் திட்டம் இது. இது முற்றிலும் உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டமாகும். உயர்கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை முற்றிலுமாக விடுவித்துக்கொள்ளும் நடவடிக்கையே இது. நடுவண் அரசின் தேசிய கல்விக் கொள்கையை இம்மி பிசகாமல் அப்படியே நிறைவேற்றும் முயற்சியே

இதன்படி, தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விரும்பினால் பல்கலைக்கழகமாக தங்களை மாற்றிக்கொள்ளலாம். அப்படியானால், அவர்கள் வைப்பதுதான் சட்டம். ஆசிரியர்கள், அலுவலர்கள் ஊதிய விகிதம் முதல் கல்வித் திட்டங்கள், மாணவர்களின் கட்டணம் மற்றும் சேர்க்கை முறை வரை- எல்லாவற்றையும் தனியாரே தீர்மானிப்பார்கள்.

பல்கலைக்கழகம் தொடங்க குறைந்தது 100 ஏக்கர் நிலம் வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி, 25 ஏக்கர் போதும் என்ற தளர்வு யாருக்காக? அரசு எதற்காக இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது? தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்களின் நிலைமை, அரசின் கவனிப்பு இல்லாமல் சீர்கெட்டுப் போயுள்ளது. அதைச் சரிசெய்யும் மனம் இல்லாமல், மௌனமாக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

அதற்குப் பதிலாக, எதிர்நிலையாக தனியாருக்கு உயர்கல்வியை வாரி வழங்கும் நிலை ஏன் ஏற்படுகிறது? ஏதோ ஆராய்ச்சி மேம்பாடு, கல்வி மேம்பாடு போன்றவற்றின் காரணமாக இந்த முன்வரைவை வைக்கிறோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை.

இந்தச் சட்டத் திருத்தம் வருங்கால ஏழை மாணவர்களை கடுமையாக பாதிக்கும். வருங்காலத்தில் உயர்கல்வி ஒரு வியாபார விலைப்பொருளாக மட்டுமே மாறும். இதில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்லூரிகள் புதிய பல்கலைக்கழகங்களாக செயல்படலாம் என்ற திட்டமும் முன்வைக்கப்படுகிறது.

உயர்கல்வி

உள்நாட்டிலேயே தரமான கல்வி வழங்கும் திறமைமிக்கவர்கள் இருக்கும் வேளையில், ஏன் இந்த வியாபார முன்னெடுப்பு? தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பிற தொழில்கல்வி கல்லூரிகளும் மேலும் வளர்ச்சி அடைந்து தங்கள் வணிகத்தை பெருக்கிக்கொள்ளத்தான் இந்தச் சட்டத் திருத்த முன்வரைவு உதவுவதாகத் தெரிகிறது.

தமிழகத்தின் அனைத்து மக்களும் இதுகுறித்து அக்கறை செலுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுகிறோம். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கவனத்தை இந்தப் பிரச்சினையின் மீது செலுத்தி, இந்தச் சட்ட முன்வரைவை அரசு திரும்பப் பெற வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.