“சரியாக நடக்கவில்லை என்றால் அழிக்கப்படுவார்கள்” – ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 13-ம் தேதி எகிப்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்​றும் எகிப்து அதிபர் அல் சிசி தலை​மை​யில் நடை​பெற்ற காசா அமைதி உச்சி மாநாட்​டில் இந்த அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

எனினும் போர் நிறுத்தம் தொடங்கியபிறகும் ஹமாஸ் – இஸ்ரேல் படைகளுக்கு இடையே காசாவில் தொடர் மோதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் தொடர்ந்து மீறி வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “அவர்கள் சரியாக நடந்துகொள்ள வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்கள் இதையே செய்து கொண்டிருந்தால், நாங்கள் உள்ளே சென்று சரி செய்ய வேண்டி இருக்கும். அது மிக விரைவாகவும் மிகவும் வன்முறையான முறையிலும் நடக்கும்.

நான் கேட்டுக் கொண்டால் இஸ்ரேல் இரண்டு நிமிடங்களில் அங்கே சென்றுவிடுவார்கள்.என்னால் அவர்களிடம், ‘உள்ளே போய் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல முடியும். ஆனால் இப்போது, ​​நாங்கள் அதைச் சொல்லவில்லை. நாங்கள் ஒரு சிறிய வாய்ப்பு கொடுக்கப் போகிறோம்” என்று தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காசா பகு​தியை கட்​டுக்​குள் கொண்​டு​வரு​வது தொடர்​பாக ஆயுதம் ஏந்​திய பாலஸ்​தீனக் குழுக்களுக்கும் ஹமாஸ் குழுக்​களுக்​கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேரை ஹமாஸ் இயக்கத்தினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் குறித்து பேசிய ட்ரம்ப், “ஹமாஸ் குழு​வினர் ஆயுதங்​களை கைவிட வேண்​டும். அவ்​வாறு செய்​ய​வில்லை என்​றால், நாங்​கள் ஆயுதங்​களை துறக்க வைப்​போம். அது விரை​வாக நடக்​கும்” என்று எச்சரித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.