லக்னோ,
மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் இருந்து ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு இன்று மாலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 166 பேர் பயணித்தனர்.
உத்தரபிரதேசத்தின் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். உடனடியாக வாரணாசியில் உள்ள விமான நிலையத்திற்கு விமானி தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இண்டிகோ விமானம் மாலை 4.10 மணிக்கு அவசர அவசரமாக வாரணாசி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதையடுத்து, விமானத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு சரிசெய்யப்பட்டு வருகிறது. பிரச்சினை சரிசெய்யப்பட்டப்பின் இண்டிகோ விமானம் ஸ்ரீநகர் புறப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.