புனே: மகாராஷ்டிராவின் புனே மாவட்டம், புரந்தர் பகுதியில் வெங்காயம் பயிரிட்டு வருபவர் சுதம் இங்லே. இவர் இந்த பருவத்தில் தனது வெங்காயப் பயிருக்கு சுமார் ரூ.66,000 செலவிட்டிருந்தார். ஆனால் இடைவிடாத மழையால் இப்பயிரின் பெரும் பகுதி சேதம் அடைந்தது. ஒரு பகுதியை மட்டுமே அவரால் காப்பாற்ற முடிந்தது.
எஞ்சிய வெங்காயத்தை சுதம் இங்லே கடந்த வெள்ளிக்கிழமை விற்பனைக்காக புரந்தர் சந்தைக்கு கொண்டு வந்தார். அங்கு 7.5 குவிண்டால் வெங்காயத்துக்கு அவருக்கு ரூ.1,729 மட்டுமே கிடைத்தது. இதில் போக்குவரத்து, சுமை கூலி, எடை போடுதல் உள்ளிட்ட செலவுகள் ரூ.1,065 போக அவருக்கு ரூ.664 மட்டுமே மிஞ்சியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உரமாக்க முடிவு: இதுகுறித்து சுதம் இங்லே கூறுகையில், “இது 1 ஏக்கர் நிலத்தில் விளைந்தது. இன்னும் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் வெங்காயம் உள்ளது. ஆனால் நான் அதை விற்க மாட்டேன். மாறாக வயலிலேயே அதை அழித்து அடுத்த ஆண்டுக்கு உரமாக மாற்றுவேன். இது விற்பதை விட லாபகரமானது. அரசு தலையிடவில்லை என்றால், விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிக்கும்” என்றார்.
ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான லாசல்கான் ஏபிஎம்சி.யில், விலை குவிண்டாலுக்கு ரூ.500 முதல் ரூ.1,400 வரை உள்ளது. கடந்த வாரம் தீபாவளிக்கு சந்தை மூடப்படுவதற்கு முன் ரூ.1,050 (1 கிலோ ரூ.10.50) என்ற அளவில் இருந்தது.
இதுகுறித்து ஏபிஎம்சி உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “இந்த ஆண்டு கோடையில் (மார்ச்-ஏப்ரல்) வெங்காய விளைச்சல் அபரிமிதமான இருந்தது. அப்போது அதிக விலை கிடைக்காத விவசாயிகள் அவற்றை இருப்பு வைத்து தற்போது விற்கின்றனர். தற்போது நாசிக் மாவட்டத்தில் 80% வெங்காய பயிர்கள் சேதம் அடைந்துவிட்டன. எஞ்சியவை தரம் குறைந்ததாக உள்ளன. எனவே அவற்றுக்கு விலை கிடைக்கவில்லை” என்றார்.