சண்டிகர்: ஹரியாணாவின் சோனிபட் மாவட்டம், கனவுர் பகுதியில் பிரபல நிறுவனம் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தில் தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை.
எனினும் அனைத்து ஊழியர்களுக்கும் சில நாட்களுக்கு முன்பு தீபாவளி பரிசாக சோன் பப்டி இனிப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் நிறுவனத்தின் வாயிலில் இனிப்பு பெட்டிகளை வீசி எறிந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து நிறுவனத்தின் தொழிலாளர்கள் கூறும்போது, “தீபாவளி போனஸ் வழங்குவதாக நிர்வாகம் உறுதி அளித்திருந்தது. ஆனால் போனஸுக்கு பதிலாக இனிப்பை வழங்கி ஏமாற்றிவிட்டனர். எங்களது எதிர்ப்பை பதிவு செய்ய இனிப்பு பெட்டிகளை நிறுவனத்தின் வாயிலில் வீசியெறிந்தோம்’’ என்று தெரிவித்தனர்.