இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக வந்துள்ள ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இரண்டு வீராங்கனைகளுக்கு, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம், நாட்டிற்கு பெரும் அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளியை கைது செய்துள்ளது.
Add Zee News as a Preferred Source
நடந்தது என்ன?
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்காக, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, இந்தூரில் உள்ள Radisson Blu ஹோட்டலில் தங்கியுள்ளது. வியாழக்கிழமை அன்று, அணியை சேர்ந்த இரண்டு வீராங்கனைகள், ஹோட்டலில் இருந்து அருகிலுள்ள ஒரு காபி ஷாப்பிற்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது, கஜ்ரானா சாலை பகுதியில், அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த ஒரு நபர், வீராங்கனைகளை தகாத முறையில் தொட்டு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த வீராங்கனைகள், உடனடியாக தங்கள் அணியின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எஸ்ஓஎஸ் மூலம் அவசர தகவல் அனுப்பியுள்ளனர்.

உடனடி நடவடிக்கை மற்றும் கைது
தகவல் கிடைத்த அடுத்த கணமே, ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு மேலாளர் Danny Simmons, உள்ளூர் பாதுகாப்பு குழுவினருடன் இணைந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து, வீராங்கனைகளை மீட்டனர். அதை தொடர்ந்து, MIG காவல் நிலையத்தில் Danny Simmons அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்ற காவல்துறை உதவி ஆணையர் Himani Mishra, பாதிக்கப்பட்ட வீராங்கனைகளிடம் வாக்குமூலம் பெற்றார். இந்த சம்பவம் குறித்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், பெண்ணின் மாண்பை குலைக்கும் வகையில் குற்றவியல் சக்தியை பயன்படுத்துதல் (பிரிவு 74) மற்றும் பின்தொடர்தல் (பிரிவு 78) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
சம்பவத்தின் போது, அங்கிருந்த ஒரு ஒருவர், குற்றவாளியின் மோட்டார் சைக்கிள் எண்ணைக் குறித்து வைத்துள்ளார். அந்த எண்ணின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியான அகீல் கான் என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அகீல் கான் மீது ஏற்கெனவே பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உலகமே உற்றுநோக்கும் ஒரு மாபெரும் சர்வதேச போட்டி இந்தியாவில் நடைபெற்று வரும் வேளையில், வெளிநாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம், விளையாட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, இந்தியாவில் சர்வதேச நிகழ்வுகளை நடத்துவதில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பெரும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
About the Author
RK Spark