மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் ‘பைசன்’.
இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் பைசன் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் பசுபதி, “இந்த படத்தை இன்னைக்கு ஒரு பெரிய வெற்றி படமா மாற்றியதில் மிகப்பெரிய பங்கு ஊடக நண்பர்களுடையது.
ரஞ்சித்துடன் எனக்கு இது மூன்றாவது படம். எனக்கும் ரஞ்சித்துக்குமிடையே ஒரு அன்பும், உறவும் இருக்கிறது. ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் வந்தபிறகு திரைப்படங்களின் பார்வை மாறியிருக்கிறது.
அதற்காக ரஞ்சித்துக்கு என்னுடைய நன்றிகள். மாரி செல்வராஜ் அதீதமான கலகக்காரன். படப்பிடிப்பு தளத்தில் அவரின் வேகமும், ஆற்றலும், சுறுசுறுப்பும் நம்மிடமும் ஒட்டிக்கொள்ளும்.
எங்களின் நடிப்பு பாராட்டப்படுவதற்கு முக்கிய காரணம் மாரி செல்வரஜ். இவரின் நடிப்பை பார்த்து அல்ல, அவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடிப்பதுதான் யதார்த்தமாக வந்திருக்கிறது. மிக்க நன்றி மாரி.
விக்ரம் – துருவ் என இருவருடனும் நடித்திருப்பது தொடர்பாக என்னிடம் கேள்வி கேட்டார்கள். இப்படி ஒப்பிடுவதே தவறு எனக் கருதுகிறேன். விக்ரமுடைய அனுபவம், வாழ்க்கை முறை எல்லாம் வித்தியாசமானது.
துருவின் வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது. அதனால், துருவின் முதுகில் பெரும் பாரத்தை இறக்க வேண்டாம் எனக் கருதுகிறேன். அவனுக்கு கிடைக்க வேண்டிய அனுபவம் நிறைய இருக்கிறது. அவன் இன்னும் நிறைய தூரம் போக வேண்டும்.

அமீர் சார் கூட நான் தனிப்பட்ட ரீதியில் கூட தொடர்புகொண்டதில்லை. பருத்தி வீரன் படத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள்.
அப்போதுதான் வெயில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டு மாதம் கால்ஷீட் கேட்டார்கள். அது என்னால் கொடுக்க முடியவில்லை.
எனவே, இப்போது முடியாது எனக் கூறிவிட்டேன். இந்த செய்தி அமீர் சாருக்கு கிடைத்ததா எனத் தெரியாது. ஆனால், இதுதான் உண்மை. எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது.” என்றார்.