மும்பை,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
அதன்படி இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நாளை (பிற்பகல் 1.45 மணி) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. இதனிடையே இந்த டி20 தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யாரெல்லாம் இடம் பெற போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா செய்து அறிவித்துள்ளார். அவரது அணியில் குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா ஆகிய மூன்று பேரில் ஒருவரை 8வது இடத்தில் தேர்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, நிதிஷ்குமார் ரெட்டி, குல்தீப் யாதவ் / அக்சர் படேல் / ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
