மதுரை: பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்தபோது, தன்னைப் பிடிக்க வந்த டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி 2011ல் தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டார்.
மதுரையிலிருந்து தென்காசிக்கு திருமங்கலம் ஆலம்பட்டி வழியாக அத்வானி வாகனத்தில் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், ஆலம்பட்டி பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு கண்டறியப்பட்டது. விசாரணையில் பைப் வெடி குண்டை வெடிக்கச் செய்து அத்வானியை கொல்ல முயற்சி நடந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக தென்காசி ஹனீபா என்ற முகமது ஹனீபா உள்ளிட்டோர் மீது திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வத்தலக்குண்டு அருகே பதுங்கி இருந்த ஹனீபாவை எஸ்ஐடி டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை சுற்றி வளைத்தது. அப்போது டிஎஸ்பியை கத்தியால் குத்திவிட்டு, ஹனீபா தப்பிக்க முயன்றார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஹனீபா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், ஹனீபா கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, ஹனீபாவை குற்றவாளி என அறிவித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கெளரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தென்காசி ஹனீபா ஆஜரானார். அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.