Virat Kohli: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றதன் கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறும் முடிவை வெளியிட்டார். ஒருநாள் தொடரில் மட்டும் 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை விளையாட விரும்பம் தெரிவித்திருக்கிறார்.
Add Zee News as a Preferred Source
ஆனால் அதுவரை அவரை இந்திய அணி நிர்வாகம் அணியில் வைத்திருக்குமா என்பது சந்தேகத்தை எழுப்பி உள்ளது. ஏனென்றால், 2027 உலகக் கோப்பையின்போது விராட் கோலி 40 வயதை நெருங்கி விடுவார். இதனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு இளம் வீரரை விளையாட வைக்கவே பிசிசிஐ முன் வரும் என கூறப்படுகிறது. இதனால் அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
விமர்சனங்கள்
இந்த சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாடினார். 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் விராட் கோலி முதல் இரண்டு போட்டியில் டக் அவுட் ஆனார். மூன்றாவது போட்டியில் அரைசதம் கடந்து கடைசி வரை களத்தில் நிலைத்தார். இதனால் அவர் ஒய்வை அறிவிக்கலாம் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விரைவில் ஓய்வை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இது தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளது.
விராட் கோலி ஓய்வு எப்போது?
இந்த நிலையில், விராட் கோலி எப்போது ஓய்வை அறிவிப்பார் என அவரது நெருங்கிய நண்பரும் முன்னாள் தென்னாப்பிரிக்கா அணியின் வீரருமான ஏபிடி வில்லியர்ஸ் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது, நான் உங்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். அவர் தனது வாழ்க்கையின் இறுதி வரை சமநிலையைக் கண்டறிய அனுமதியுங்கள். அவரைக் கொண்டாடுங்கள். அவருக்கு ஒரு ‘நன்றி’ சொல்ல வேண்டும்.
விராட் கோலி 2027 உலகக் கோப்பை வரை விளையாடுவார் என நினைக்கிறேன். அத்தொடரே அவருடைய இறுதி தொடர்பாக இருக்கும். ஐபிஎல்லை எடுத்துக்கொண்டால், அது வேறு. அவர் 4 முதல் 5 ஆண்டுகள் வரை கூட விளையாடுவதை பார்க்கலாம். விராட் மற்றும் ரோகித் சர்மா தங்களைச் சுற்றியுள்ள வீரர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கமும், மற்ற வீரர்கள் அவர்களிடமிருந்து எடுக்கும் நம்பிக்கையும் மிகப்பெரியது. அவர்கள் சில நேரங்களில் சிறப்பாகச் செயல்படாவிட்டாலும், அவர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் என கூறினார்.
About the Author
R Balaji