சில மாதங்களாகவே தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம், கடந்த வாரத்தில் ஏறியும், இறங்கியும் வந்தது.
இதில் என்ன ஸ்பெஷல் என்றால், இனி தங்கம் விலை இறங்கவே இறங்காது என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், பவுனுக்கு ரூ.88,800 வரை குறைந்தது.
இப்படி தங்கம் விலை குறைவது கடந்த 22-ம் தேதி முதலே இருந்து வருகிறது. இருந்தும், கடந்த வாரம் தான், பெரியளவிலான இறக்கத்தை சந்தித்தது தங்கம் விலை.
இந்த வாரம் திங்கட்கிழமை (அக்டோபர் 27), தங்கம் விலை கிராமுக்கு ரூ.11,450 ஆகவும், பவுனுக்கு ரூ.91,600 ஆகவும் விற்பனை ஆனது.

அதன் பின், கடந்த 30-ம் தேதி (புதன்கிழமை), கிராமுக்கு ரூ.11,100 ஆகவும், பவுனுக்கு ரூ.88,800 ஆகவும் விற்பனை ஆனது.
பின், மீண்டும் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.11,310 ஆகவும், பவுனுக்கு ரூ.90,480 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.
இப்படி மாறி மாறி தங்கம் விலை குறைந்தும், ஏறியும் வந்ததற்கான காரணங்களைப் பார்க்கலாம்.
ஏன் குறைவு?
தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருகிறது.
பின், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம் குறித்த எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், உலக அளவில் இருந்த அரசியல் பதற்றங்கள் ஓரளவு தணிந்திருந்தன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு குறித்த எதிர்பார்ப்புகள் இருந்தன.
ஏன் ஏற்றம்?
இந்த வாரத்தில் இஸ்ரேல் மீண்டும் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலை நடத்தியது. இது உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ட்ரம்ப் – ஜின்பிங் சந்திப்பில் நினைத்த அளவிற்கு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிடவில்லை.
ஏற்கெனவே தெரிந்திருந்தது தான் என்றாலும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு சந்தையில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.

அடுத்த வாரம் எப்படி இருக்கும்?
நேற்று ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதினின் சந்திப்பு ரத்தாகி உள்ளது.
இன்னமும் அமெரிக்காவில் அரசு நிர்வாக மூடல் முடிவு பெறவில்லை.
இத்தகைய காரணங்களுக்கு மத்தியில், அடுத்த வாரம், உலக அளவில் அரசியல் நிலவரங்களும், சந்தை நிலவரங்களையும் பொறுத்து தங்கம் விலை அமையும்.