துனிஸ்: துனிசியாவுக்கு வேலைக்கு சென்ற இந்திய தொழிலாளர்கள் 48 பேருக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் உணவுக்கு வழியின்றி தவிப்பதால், மத்திய அரசு மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
டெல்லி குருகிராமைச் சேர்ந்த பிரேம் பவர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 48 பேரை ஆப்பிரிக்க நாடான துனிசியாவுக்கு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஆனால், அவர்களுக்கு ஒப்பந்த ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. 8 மணி நேரம் வேலை எனக் கூறி அழைத்துச் சென்றவர்கள் 12 மணி நேரம் வேலை பார்க்கும்படி வற்புறுத்தியுள்ளனர். மேலும், அவர்களுக்கு சம்பளமும் வழங்கவில்லை.
சம்பளம் கேட்டால் நாடு திரும்ப முடியாது, சிறைக்கு செல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் தற்போது சாப்பிடுவதற்கு கூட பணம் இன்றி தவிக்கின்றனர். இவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட ஜார்க்கண்ட் எம்எல்ஏ நாகேந்திர மகதோ கடிதம் எழுதியுள்ளார்.