கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரையும் சுட்டு பிடித்த போலீசார்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் கைது செய்த போலீசார், அவர்கள் தப்பியோட முயன்றபோது காலில் சுட்டு பிடித்து கைது செய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Add Zee News as a Preferred Source

நடுங்க வைத்த கொடூர சம்பவம்

கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டம் படித்து வரும் 20 வயது மாணவி, தனது ஆண் நண்பருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் கோவை விமான நிலையம் அருகே காரில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திருட்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அவர்களின் காரை மறித்துள்ளது. கும்பல், காரின் கண்ணாடியை கல்லால் உடைத்து, மாணவியின் ஆண் நண்பரை வெளியே இழுத்து, கத்தியை காட்டி மிரட்டி, இரும்பு கம்பி மற்றும் கற்களால் கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் நிலைகுலைந்து விழ, அந்த கும்பல் மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றது

விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆளரவமற்ற, தனிமையான பகுதிக்கு மாணவியை கொண்டு சென்ற அந்த மிருகங்கள், அவரை ஒரு பாழடைந்த அறையில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளன. இந்த கொடூரத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு, திங்கள்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் மாணவியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

காவல்துறையின் அதிரடி வேட்டை

இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த மாணவியின் நண்பர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கோவை மாநகர காவல்துறை, குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது. முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகள் இந்த கொடூரத்தை செய்வதற்கு முன்பு, கோவில்பாளையம் அருகே ஒரு இருசக்கர வாகனத்தைத் திருடியது தெரியவந்தது.

காலில் சுட்டு பிடித்த காவல்துறை

தனிப்படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில், குற்றவாளிகளான ஷிக், அப்துல் காதர், மற்றும் அஜய் ஆகியோர் பதுங்கியிருந்த இடம் கண்டறியப்பட்டது. காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றபோது, மூவரும் தப்பியோட முயற்சித்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் மூவரையும் கால்களில் சுட்டு பிடித்தனர். காயமடைந்த குற்றவாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மேலும்  படிக்க | வாக்காளர் பட்டியல் திருத்தம் : ஆட்டத்தை தொடங்கிய திமுக.. வெளியான முக்கிய அறிவிப்பு

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.