ஹோபர்ட்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்களும், ஸ்டோய்னிஸ் 64 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 187 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் வாழ்த்தி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் தற்போது ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக தெரிகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி20 போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். பவுலிங் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பேட்டிங்கில் தான் ஏன் டாப் ஆர்டரில் விளையாட தகுதியானவர் என்பதை நிரூபித்துள்ளார். ஷார்ட் பிட்ச் பந்தை அவர் விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது.
அவரது இந்த திறமையை பார்க்கும்போது நிச்சயம் அவர் டி20 அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பார் என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் அதிரடியாக விளையாடும் திறன் இல்லாதது போல் தெரிந்த வாஷிங்டன் சுந்தர் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியிடமிருந்து வெற்றியை பறித்துக் கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.