சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. அணியின் முக்கிய வீரரான சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா இந்தச் சாதனைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்தியும் பரிசுகளை வழங்கியும் வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றைய தினம் (நவம்பர் 6) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்ணகி நகர் சென்று கார்த்திகா மற்றும் குழுவினரை வாழ்த்தியுள்ளார். ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
Lokesh Kanagaraj என்ன கூறினார்
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கார்த்திகாவின் வெற்றி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ரொம்ப சந்தோஷமா இருந்தது. அட் த சேம் டைம் ரொம்ப பெருமையாவும் இருந்தது, அதுக்கு ஒரு வாழ்த்து தெரிவிக்கதான் வந்தேன்.

ஏன்னா நான் இந்த ஏரியாக்கு பல முறை வந்துருக்கேன். ரொம்ப பழக்கப்பட்ட ஏரியா, மாநகரம் சூட்டிங்கும் இந்த இடத்துல பண்ணிருக்கேன், மாஸ்டர் படத்துல இங்க இருந்து நிறைய பேரை நடிக்க வச்சிருக்கேன்.
சோ எனக்கு இங்க இருந்து சாம்பியனா வந்ததுல இன்னும் பெருமை. அவங்க இன்னும் மேல சக்சஸ் ஆகணும். அதுக்கு வேண்டிய ஒரு வாழ்த்துதான் இது.
எவ்வளவு தூரம் நம்மளால போக முடியுமோ அதுக்கு ட்ரை பண்ணணும். அதுக்கு முடிஞ்ச அளவுக்கு சப்போர்ட் இப்படிதான் காட்ட முடியும். இன்னும் இது நாலு பேரை இன்ஸ்பயர் பண்ணலாம்” எனப் பேசினார்.