சென்னை: ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைதாகி சிகிச்சையில் இருந்த ரவுடி நாகேந்திரன் இன்னும் இறக்கவில்லை. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீஸார் தப்பிக்க வைத்துவிட்டனர்’ என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான வழக்கறிஞர் ஆனந்தன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டின் அருகே ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்த பிரபல ரவுடியான நாகேந்திரன் இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவரது மகன்கள் உட்பட மொத்தம் 27 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழலில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரவுடி நாகேந்திரன் கடந்த மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது, “இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளநிலையில், வழக்கின் கோப்புகளை தமிழக காவல் துறை இன்னும் சிபிஐ வசம் ஒப்படைக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் உள்ள எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, இந்த வழக்கின் இடையீட்டு மனுதாரரான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் தரப்பில் வழக்கறிஞரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவருமான பி.ஆனந்தன் ஆஜரானார். அவர் கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தமிழக போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை என்பதால்தான் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக உள்ள நாகேந்திரன் இன்னும் இறக்கவில்லை. அவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து போலீஸார் அவரை தப்பிக்க வைத்துள்ளனர்.
நாகேந்திரனின் உருவத்துக்கும், இறந்ததாக தெரிவித்து ஒப்படைக்கப்பட்ட உடலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இந்த வழக்கில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. எனவே, இந்த சூழலில் மனுதாரர்கள் யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை நவ.10-ம் தேதிக்கு (நாளை) நீதிபதி தள்ளி வைத்தார்.