மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சாஜிதா, பாத்திமா, இப்ராஹீம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: முஸ்லிம் தலைவர்கள், இயக்கத்தினர் ஆகியோர் மீதான மத்திய அரசின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
ஆனால், கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் அளித்த புகாரில், ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் இயக்க கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர் என்றும், இந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், 304 பேர் மீது அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர்மோகன், அனைவர் மீதும் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.