போபால்: மத்திய பிரதேசத்தின் பச்மரி நகரில் காங்கிரஸ் நிர்வாகிகளின் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். முன்னதாக பச்மரி சரணாலயத்தை அவர் பார்வையிட்டார். திறந்த ஜீப்பில் சரணாலயம் முழுவதும் சபாரி சென்றார்.
இதுகுறித்து பச்மரி சரணாலய துணை இயக்குநர் சஞ்சீவ் சர்மா கூறும்போது, “ராகுல் காந்தி பட்டாம்பூச்சி பூங்காவில் சிறிது நேரம் தங்கியிருந்தார். ஜீப்பில் சென்றபோது சில வகை மான்களை அவர் பார்த்தார். அவற்றின் விவரங்களை கேட்டறிந்தார். இங்குள்ள பாறை ஓவியத்தையும் அவர் கண்டு களித்தார்’’ என்று தெரிவித்தார்.
இதன்பிறகு நிருபர்களுக்கு ராகுல் காந்தி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, “ஹரியானா, மகாராஷ்டிரா, ம.பி, சத்தீஸ்கர் மாநிலங்களிலும் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. வாக்கு திருட்டை மறைக்கவே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.