புதுடெல்லி: டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டிய மருத்துவர் உமர் நபியின் உடலை அடையாளம் காண்பதற்காக அவருடைய தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லோக் நாயக் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. உடல்கள் சிதைவடைந்திருப்பதால் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இந்த சம்பவத்தில் வெடித்துச் சிதறியது ஹுண்டாய் ஐ-20 கார் என்றும் அதை ஓட்டி வந்தது காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி என்றும் தெரியவந்துள்ளது. முன்னதாக பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் உமர் நபி உயிரிழந்தாரா அல்லது தப்பி விட்டாரா என்பது தெரியவில்லை. இதையடுத்து, காஷ்மீரின் புல்வாமா நகரை அடுத்த கோயில் கிராமத்தில் உள்ள அவருடைய தாயின் டிஎன்ஏ-வை அதிகாரிகள் நேற்று சேகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த டிஎன்ஏவை வைத்து உமர் நபி இந்த சம்பவத்தில் உயிரிழந்தாரா உயிருடன் இருக்கிறாரா என்பதை அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே கைதான மருத்துவர் முசாம்மில் அகமதுவும் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. முசாம்மில் மற்றும் உமர் நபி ஆகிய இருவரும் ஹரியானாவின் அல்-பலா மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.