புதுடெல்லி: செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று லோக் நாயக் ஜெய் பிரகாஷ் (LNJP) மருத்துவமனையில் நேரில் சந்தித்தார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பூடானுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, டெல்லியில் தரையிறங்கிய உடன் நேராக எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்றார். காயமடைந்தவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்து உரையாடியதாகவும், அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தியதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், மருத்துவமனையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நிலை, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, எல்என்ஜேபி மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவர் பிரதான நுழைவாயிலில் ஊடகங்களைத் தவிர்த்து, பிரத்யேக பின்புற வாயில் வழியாக மருத்துவமனைக்குள் சென்றார்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாலையில் வெடித்துச் சிதறிய காரை, காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்துள்ளார். குண்டுவெடிப்பில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். அவரும் ஹரியானாவின் அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
அந்த மருத்துவக் கல்லூரியில் சக மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் உமர் முகமது நபி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தனது காரில் டெல்லிக்குள் நுழைந்துள்ளார். போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க கார் இன்ஜின் பகுதியில் அவர் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்தார். இனிமேல் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி பதற்றத்தில் டெல்லி செங்கோட்டை அருகே தற்கொலை தாக்குதல் நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
முன்னதாக நேற்று பூடானின் திம்புவில் பேசிய பிரதமர் மோடி, “டெல்லியில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமைப்புகள் இந்த சதியின் அடித்தளத்தை கண்டுபிடிக்கும். இதற்குப் பின்னால் இருக்கும் சதிகாரர்களை தப்ப விடமாட்டோம். அவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.