
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தவெகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கினார். தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்டச் செயலாளர்கள் அப்புனு,பாலமுருகன், குமார், சரவணன், தாமு, திலீப் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது:
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்: எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பெயர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கொத்துக் கொத்தாக நீக்கப்படுவதாக மக்கள் கூறுகிறார்கள். இது அப்பட்டமான துஷ்பிரயோகம். அதேநேரம், போலி வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படுவதாக தகவல் வருகிறது. புறவாசல் வழியாக ஆட்சியாளர்கள் வெற்றி பெறப் பார்க்கின்றனர். இது ஆளுங்கட்சிக்கு சாதகமான அரசியல் சூழ்ச்சி.