"கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" – தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!

இன்றைய மக்களவை கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

இது குறித்துப் பேசியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியைப் போல ஒரு தலைவரைக் காண்பது அரிது. ஒன்றிய அரசு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்.

எம்.ஜி.ஆர், கலைஞர்

கலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிட இயக்கத்தின் முக்கியமான தலைவர். திராவிட கொள்கையை முன்னெடுத்துச் சென்றவர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தவர். ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்.

அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஒருமுறை மகாத்மா காந்தி குறித்து, ‘இவ்வுலகில் பல தலைமுறைகள் வந்துபோகும். ஆனால், ரத்தமும் சதையுமாக தலைமுறைகள் கடந்து காலம் கடந்து நிற்பவர் மாகத்மா காந்தி போன்ற சிலர்தான்’ என்று புகழ்ந்தார். அது கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் பொருந்தும்.

மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

கிராமத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றவர். 1957 – 2016 ஆண்டு வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தான் சந்தித்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே கண்டிராத தலைவர் கலைஞர் கருணாநிதி. அரசியல், இலக்கியம் எனப் பல துறைகளில் ஆளுமை பெற்றவர்.

அப்படிப்பட்ட ஆளுமைமிக்க அரசியல் தலைவர் நீண்ட காலம் ஆட்சியாளராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.