சண்டிகார்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகாரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி 48 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் திலக் வர்மா (26 ரன்), அக்ஷர் பட்டேல் (23 ரன்), ஹர்திக் பாண்ட்யா (59 ரன்) ஆகியோரது கணிசமான பங்களிப்பால் 175 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டிப்பிடித்தது. அதன் பிறகு பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், பும்ரா, வருண் சக்ரவர்த்தி மிரட்டினர். இந்தியாவின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 12.3 ஓவர்களில் வெறும் 74 ரன்னில் சுருண்டது. 20 ஓவர் போட்டி வரலாற்றில் தென்ஆப்பிரிக்காவின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கு இந்த வெற்றி கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது. இதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்காவை போட்டுத்தாக்க தீவிரம் காட்டுவார்கள். அணியில் அனேகமாக மாற்றம் ஏதும் இருக்காது. விக்கெட் கீப்பர் இடத்தை ஜிதேஷ் ஷர்மா பிடித்துள்ளதால், சஞ்சு சாம்சன் வெளியே உட்கார வேண்டி இருக்கும். ஹர்திக் பாண்ட்யா இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 100 விக்கெட் மைல்கல்லை எட்டுவார்.
தொடக்க ஆட்டத்தில் மோசமான தோல்வியை தழுவிய தென்ஆப்பிரிக்கா அதில் இருந்து மீண்டு எழுச்சி பெற முயற்சிக்கும். ‘கட்டாக் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய பவுலர்களுக்கு எங்களது பேட்ஸ்மேன்களால் பதில் சொல்ல முடியவில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை 180-க்குட்பட்ட எந்த ஸ்கோரும் விரட்டிப்பிடிக்கக்கூடியது தான். ஆடுகளத்தில் கொஞ்சம் பவுன்ஸ் இருப்பது போல் தெரிந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க பேட்டர்கள் அதற்கு ஏற்ப விளையாடி இருக்க வேண்டும். பேட்டிங் துறையில் நாங்கள் விரைவாக முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்’ என தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஷ்வெல் பிரின்ஸ் குறிப்பிட்டார்.
அந்த அணியில் டிவால்ட் பிரேவிஸ், கேப்டன் மார்க்ரம், குயின்டான் டி காக், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் என அதிரடி சூரர்களுக்கு பஞ்சமில்லை. இன்றைய ஆட்டத்தில் பேட்டால் பதிலடி கொடுக்க வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நியூசண்டிகார் மைதானத்தில் இதுவரை எந்த ஆண்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடந்ததில்லை. இரண்டு பெண்கள் ஒரு நாள் ஆட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் கடந்த ஏப்ரல், மே மாதம் இங்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 6 ஆட்டங்கள் நடந்தன. இதில் 5 முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. அத்துடன் முதலில் பேட் செய்த அணி 4 முறையும், 2-வது பேட் செய்த அணி 2 முறையும் வெற்றி பெற்றன. அதனால் பனியின் தாக்கம் ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்டயா, ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டிவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டோனோவன் பெரேரா, மார்கோ யான்சென், லுதோ சிபாம்லா அல்லது கார்பின் பாஷ் அல்லது ஜார்ஜ் லின்டே, ேகஷவ் மகராஜ், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்டியா.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.