5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 7-4, 7-4, 7-2 என்ற நேர்செட்டில் டீகான் ரஸ்செலை தோற்கடித்தார். ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 7-1, 7-6, 7-1 என்ற நேர்செட்டில் வான் நிகெர்க்கை விரட்டியடித்தார். மற்றொரு பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 7-3, 7-4, 7-4 என்ற நேர்செட்டில் ஹாய்லி வார்டை வீழ்த்தினார்.
இந்திய அணி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் எகிப்தை எதிர்கொள்கிறது. முன்னதாக எகிப்து அணி காலிறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றியது.
மற்றொரு காலிறுதியில் ஹாங்காங் 3-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஜப்பான்-மலேசியா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஆனால் செட் கணக்கின் அடிப்படையில் ஜப்பான் வெற்றி பெற்று அரையிறுதியை எட்டியது. அரையிறுதியில் ஹாங்காங்- ஜப்பான் அணிகள் மோதுகின்றன.