சிறை: “என் சம்பளம் பற்றி என்ன பேச… எனக்கு கலைதான் முக்கியம்!" – விக்ரம் பிரபு

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிறை. இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் ஆவார். விக்ரம் பிரபுவை வைத்து டாணாக்காரன் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அவர்களின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “எனக்கு சினிமா ஒரு ஆர்ட். ஆனால் பொருளாதாரம் என்ற ஒரு சிக்கலால் நிறைய படங்களை எடுக்க முடியாமல் போகிறது.

சிறை: விக்ரம் பிரபு
சிறை: விக்ரம் பிரபு

அதனால் ஒரு நல்ல சப்ஜெக்ட் எடுத்துட்டு வரணும். அதுக்காக ஒரு குழுவாக என்ன வேலைகளையெல்லாம் செய்ய முடியும் என முயற்சிக்கிறேன். அதனால் என் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக நான் யோசிக்கவில்லை.

சினிமா ஒரு பிசினஸ் என்பதில் மாற்றுகருத்து இல்ல. ஆனால், அந்த பிசினஸ்குள்ள நாம போயிட்டா ஆர்ட்டை மறந்துடுவோம். அதுக்காக நம்மை நம்பி வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் கதைகளை கொடுத்தால் பிசினஸ் தானாக நடக்கும்.

அதில் ஆர்ட் தானாக வளரும். அதனால் நாம் இப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது முதலில் ஆர்ட் பிறகுதான் பிசினஸ். இதை நான் கடைபிடிக்கிறேன்.

டாணாக்காரன் பட கதாப்பாத்திரத்தின் அறிவுக்கும், சிறை கதாப்பாத்திரத்தில் இருக்கும் கதிரவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். அறிவு காவல்துறையில் பயிற்சி எடுக்க போன இடத்துல, அந்த சிஸ்டம் பார்த்து அதிர்ச்சியாகி அந்த சிஸ்டம் பத்தின ஒரு கருத்து வைத்திருப்பான்.

சிறை: விக்ரம் பிரபு
சிறை: விக்ரம் பிரபு

சிறை படத்தில் 12 வருடங்களாக காவல்துறையில் வேலை செய்யும் ஒரு காவல்துறை அதிகாரி, அவருக்குள் அந்த போலீஸ் என்னவெல்லாம் செய்யும், அவர் ஒரு பிரச்னையை அணுகும் விதத்தில் தொடங்கி எல்லாமே வித்தியாசமா இருக்கும். உங்களால கண்டிப்பா அதை புரிந்து அனுபவிக்க முடியும்.

எனக்கு எல்லா வருடமும் சந்தோஷமான வருடம்தான். ஒவ்வொரு வருடமும் இந்த வருடத்தில் நாம் என்ன தவறுகளைச் செய்தோம்… இதிலிருந்து என்ன பாடங்களைக் கற்றோம் என யோசிப்பேன். இதுவரைக்கும் வந்த வருடங்கள் எல்லாமே, நல்லதும் நடந்துருக்கு கத்துக்க வேண்டிய இடங்களும் இருந்திருக்கு. அடுத்தடுத்தது நல்லதே செய்துக்கொண்டிருந்தால் நல்லதே வரும் என்கிற நம்பிக்கையில் கடந்துச்சென்றுகொண்டே இருக்கிறேன்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.