டி20 உலகக் கோப்பை: இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்

மும்பை,

20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.

அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் நெதர்லாந்து. நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி ஆமதாபாத்தில் மோதுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகிய 2 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த டி20 தொடருக்கான இந்திய அணி: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஷிசிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.